Tuesday, December 31, 2019

கலர் வாங்கியும்… எம். சங்கர்

ஜனகராஜ்  வெளிநாட்டு தயாரிப்பான   விலை உயர்ந்த கலர் டை பாட்டிலை திறந்தார்.  கிளவுஸ் அணிந்து கொண்டு முடிகளைப் பிரித்து கம்பிகளில் பூசத் தொடங்கினார். 
“போதுங்க” செல்லமாகக் கடிந்து கொண்டாள் மனைவி கோமதி. “எத்தனை பணம் செலவாகுது , நேரம் வீணாகுது , பேரக்குழந்தை பிறந்தாச்சு ,      இப்போ இதெல்லாம் தேவைதானா”  என்றாள்.
”மனசு இளமையா இருக்கணும்னு சொல்றோம் , தோற்றமும் இளமையா இருக்க வேண்டாமா?”  சிரித்துக் கொண்டே கிருதா , மீசையை மறக்காமல் டை அடித்தார் .  புருவத்தைக்கூட விட்டுவைக்கவில்லை.
குளித்து டிபன் சாப்பிடும்போது , தொடர்ந்தார் , “வீட்டை விட்டு வெளில இறங்கினாலே டார்ச்சர்தான் . பெரிசுன்னு கூப்பிடாத குறைதான் . ஏளனமா லுக் விடறது , நக்கல்ஸ் , கிண்டல் அடிக்கறது ,  இப்பல்லாம் வயசை பார்த்து ஏமாத்தவும் ஆரம்பிச்சுட்டாங்க..”
கோமதி கொண்டு வந்த சட்டையைப் பார்த்துவிட்டு , “அரை கை சட்டை , இது வேண்டாம் , நீல கட்டம் போட்ட முழு கை சட்டை குடு”  என்றார். முதியோர் உதவி மையம் , வாட்ஸ் அப் க்ரூப்புகளிலிருந்து தூர ஓடுபவர்.


அவசரமாக பஸ் பிடித்து ரயில் நிலையத்துக்கு சென்ற அவர் , கவுன்டரில் தாழ்ந்த குரலில்  “கோயம்புத்தூருக்கு சீனியர் சிட்டிசன் டிக்கட் குடுங்க” என்றவர்,   ‘டை அடிச்சுக்க பணம் தாராளமா செலவழிப்பீங்க , ரயில்ல மட்டும் கன்செஷன் டிக்கட், அதை வாங்க தனி க்யூ கேக்குது’   என்று  கவுன்டர் பெண் முணுமுணுப்பதைக் கவனிக்கத் தவறவில்லை. கோபத்தில் பாக்கி சில்லறை வாங்க மறந்தது கோயம்புத்தூரில் ஞாபகம் வந்தது.    

*****

No comments:

Post a Comment